2000, 500 ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் காந்தி படத்தை அகற்ற கோரிக்கை
1 min read
Demand for removal of Gandhi image on 2000 and 500 rupee notes
8.10.2021
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம்
லஞ்சம், ஊழலுக்கு பயன்படுத்தப்படுவதால்
கோடா, அக்.9-
ரூபாய் நோட்டுகள் லஞ்சம், ஊழலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இருந்து மஹாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.
காந்தி பிறந்தநாள்
ராஜஸ்தான் மாநிலத்தின் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பரத் சிங் குண்டன்பூர். மகாத்மா காந்தியின் 152வது பிறந்த தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பிரதமர் மோடிக்கு, பரத் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காந்தி படம்
நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை நாடு முழுதும் உள்ளது. மக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்கள் நிறைவேற்ற பழகிவிட்டனர். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், 2020ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது தினமும் இரண்டு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லஞ்சமாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தான் அதிகளவில் கொடுக்கப்படுகின்றன; இது ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு செய்யும் அவமரியாதை என்று தான் கூற வேண்டும். அதனால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும். அதேபோல் அசோக சக்கரத்தின் படத்தையும் நீக்க வேண்டும்.
ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் 5, 10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளில் மட்டும் மகாத்மா காந்தி படத்தை அச்சடித்தால் போதும். இது தான் மகாத்மாவுக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.