பெற்றோரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; 28 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு
1 min read
Life sentence for murder of parents; Judgment after 28 years
12/10/2021
காசர்கோட்டில் 28 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரை கொலை செய்தவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
பெற்றோர் கொலை
கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 22ல் சதாசிவம் என்பவர் தன் பெற்றோரை கோடாரியால் வெட்டி படுகொலை செய்தார். வானொலியில் சத்தத்தைக் குறைக்குமாறு, சதாசிவத்தின் தாய் கூறியதால் எழுந்த வாக்குவாதத்தில், சதாசிவம் தன் பெற்றோரை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதை, சதாசிவத்தின் மனைவியும், அப்போது 4 மற்றும் 5 வயதில் இருந்த அவரது பிள்ளைகளும் பார்த்துள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
ஆயுள்தண்டனை
இந்த வழக்கில், கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உன்னி கிருஷ்ணன், ‘சதாசிவம் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ எனத் தீர்ப்பளித்துள்ளார்.
தன் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதாசிவம் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு கடந்த 2018 வரை சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது 28 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.