ஞாயிற்று அன்று கடற்கரைக்கு செல்லலாம்-அங்கன்வாடியை திறக்க அனுமதி
1 min read
The public is allowed to go to the beach on Sundays
14.10.2021
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடற்கரைக்கு…
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு தொழில்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஓணம் உள்ளிட்ட பண்டிகையை மக்கள் கொண்டாடியதால் அங்கு கொரோனா தொற்று வெகு வேகமாக பரவியது. எனவே தமிழகத்தில் விழா கொண்டாட்டங்கள், மத கூடுகைகளுக்கு 31-ந் தேதி வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாடுகளை நடத்த பொதுமக்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை விஜயதசமி வருகிறது. எனவே கோவில்களைத் திறக்கும்படி அரசுக்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. சென்னை ஐகோர்ட்டும், இதில் அரசு முடிவு செய்யும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு குறித்து நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட கொரோனா தடுப்பு மருத்துவ நடவடிக்கைகள், கூடுதல் தளர்வுகள், விஜயதசமி தினத்தன்று கோவில்கள் திறப்பு, வார இறுதி நாட்களில் கோவில்கள் திறப்பு மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
- ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அங்கன்வாடி பள்ளிகள்
- மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
இவ்வாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.