வைகோ மகனுக்கு கட்சியில் பதவி
1 min read
Position in the party for Vaiko’s son
20.10.2021
ம.தி.மு.க., தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை நியமிக்கப்பட்டார். இன்று நடந்த ரகசிய ஒட்டெடுப்பிற்கு பின் கட்சி தலைமை அறிவித்தது. தொண்டர்கள் விருப்பபடியே கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க.
சென்னையில், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடந்தது. அதில் வைகோவின் மகன் துரைக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதையடுத்து ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் 106 ஓட்டுக்களில் 104 ஓட்டுக்கள் துரை வையாபுரிக்கு ஆதரவாக கிடைத்தது. இதையடுத்து கட்சியின் தலைமை கழக செயலாளராக துரை நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு வெளியானது.
வாரிசு அரசியல் இல்லை
இது குறித்து ம.தி.மு.க, பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கட்சியின் வாரிசு அரசியல் என்பது கிடையாது. அந்த வகையில் துரை நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. எனக்கு விருப்பமில்லாமல் தான் இருந்தேன். தொண்டர்கள் விருப்பபடியே தலைமை கழக செயலாளர் பொறுப்பு துரைக்கு வழங்கப்பட்டு உள்ளது. துரை மக்கள் பணியாற்றினார். தொண்டர்கள் தான் அவரை கட்சிக்குள் இழுத்தனர்.அவர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
வயதாகி விடவில்லை
பொது வாழ்வுக்கு தேவையான அத்தனை குணாதிசயங்களும் துரைக்கு உள்ளது.
நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். வயதாகவில்லை. இன்று கூட வாலிபால் விளையாடுவேன். மரணம் வரை எனக்கு அரசியலில் இருந்து ஓய்வில்லை; எனக்கு வயது ஆகிவிடவில்லை. வரும் 25-ந்தேதி பெரியார், அண்ணா நினைவிடத்தில் துரை மரியாதை செலுத்திய பின், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
இவ்வாறு வைகோ கூறினார்.