புதுச்சேரியில் பா.ம.க. செயலாளர் தேவமணி படுகொலை
1 min read
Puducherry Secretary Devamani assassinated
23.10.2021
புதுச்சேரி மாநிலத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டார்.
பா.ம.க. செயலாளர்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் தேவமணி (வயது53). இவரது வீடு திருநள்ளாறு மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. அதே மெயின் சாலையில் இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் உள்ளது.
நேற்று இரவு 10.20 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தேவமணி சென்று கொண்டிருந்தார்.
கொலை
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென தேவமணியை அவரது வீட்டுக்கு அருகில் வழிமறித்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
உடலில் தலை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயமடைந்த தேவமணியை ரத்த வெள்ளத்தில் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவமணி பரிதாபமாக இறந்து போனார்.
நிலத்தகராறு
இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம் போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
இதையொட்டி திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சி ஒன்று பதிவு வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் தேவமணியை துரத்தி செல்வதும், பின்னர் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.