தலைமை செயலகத்த்ல் மரம் விழுந்து பெண் போலீஸ் பலி-ரூ.10 லட்சம் நிவாரண நிதி
1 min read
Female police officer killed after tree fell on General Secretariat- Rs 10 lakh relief fund
2.11.2021
தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெண் காவலர் சாவு
கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பழமையான மரம் இன்று காலை வேரோடு சாய்ந்து அங்கு இருந்தவர்களின் மீது விழுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கவிதாவின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வு
மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகின. வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மரம் சாய்ந்து பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் போக்குவரத்துக் காவலர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ரூ.10 லட்சம்
இந்த நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காலை 9 மணியளவில், தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவுக் கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் கனமழை காரணமாக வேரோடு சாய்ந்தது.
அப்போது அங்கு பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து தலைமைக் காவலர் கவிதா மரத்தினடியில் சிக்கி உயிரிந்தார். இந்தத் துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். பணியிலிருக்கும்போது உயிரிழந்த காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த கவிதாவின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.