June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம்

1 min read

Red alert for Tamil Nadu; Indian Meteorological Center

9.11.2021

தமிழகத்திற்கு நாளை மறுநாள் (10 ஆம் தேதி) சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கனமழை

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை பெய்தது.

சென்னை நகரில் அதிகபட்சமாக சாந்தோம் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்தது. இதேபோல பல இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.

இதேபோல சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்யும் நிலையே காணப்படுகிறது.

சிவப்பு நிற எச்சரிக்கை

இந்த நிலையில், தமிழகத்திற்கு நாளை மறுநாள் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்கும் இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ஒரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் 10 ஆம் தேதி மட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கை என்பது நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்படும் எச்சரிக்கையாகும்.

விமானங்கள் தாமதம்


தொடர்மழையால். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள் நீரில் ஊர்ந்து செல்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள் ஒரு மணி நேரம் வரையிலும், உள்நாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் குறித்த நேரத்திற்கு வந்தடைந்ததாக கூறியுள்ளனர். பலத்த மழை காரணமாக பயணிகளின் உடமைகள், உணவு பொருட்களை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து சென்ற விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார், ஓமன், குவைத், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 13 சா்வதேச விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்தது ஒரு மணி நேரம் வரையிலும், அதைப்போல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா், கொச்சி, கோழிக்கோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாகவும் புறப்பட்டு சென்றது.

ஆனால் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள், வெளியூா்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றது.

மேலும் சென்னை மாநகா், வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு. எனவே, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. இதனால், விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஓடுபாதையில் உள்ள நீர் தேக்கத்தை அகற்ற ஆறு பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.