கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது; மத்திய அரசு தகவல்
1 min read
Tamil cannot be taught in Kendriya Vidyalaya schools; Federal Government Information
8/11/2021
‛‛தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்க இயலாது,” என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுநல வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‛மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் சூழலில், ஒட்டுமொத்தமாக 1,228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்று மொழிகளாக இல்லை.
சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. எனவே, தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்,’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
பயிற்று மொழியாக்க இயலாது
அப்போது மத்திய அரசுத் தரப்பில், ‛தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், தமிழ் ஒரு பாடமாக உள்ளது. தமிழை பாடமாக பயில விரும்பும் மாணவர்கள் அதனை தேர்வு செய்து பயிலும் வகையில் உள்ளது. இதேபோல எந்த மாநிலத்தில் மத்திய அரசு பள்ளி இயங்குகிறதோ, அந்தந்த மாநில மொழி பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும் போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆகவே, அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது,’ என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் நோக்கிலேயே இந்த பள்ளிகள் நடத்தப்படுகின்றன எனக் கூறி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.