கரூரில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு டாக்டர் கைது
1 min read
Doctor arrested for sexually harassing 11th class student in Karur
17/11/2021
கரூரில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் தொல்லை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் சேர்ந்தவர் 34 வயது பெண் ஒருவர் கரூரில் உள்ள பிரபல மருத்துவமனையின் கேசியராக பணியாற்றி வருகிறார். இவரது 17 வயது மகள் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கேசியராக பணியாற்றும் பெண் கடந்த 13 தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றரை அளித்துள்ளார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் தனது 17 வயது மகளை டாக்டரது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
17 வயது சிறுமியை மருத்துவமனை மேனேஜர் சரவணன் மூலம் மருத்துவமனைக்கு வரவழைத்து அவரது அறையில் வைத்து டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது
இந்த வழக்கில் டாக்டர் ரஜினிகாந்த், அவரது மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மருத்துவமனை மேலாளர் சரவணனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த்தை தனிப்படை போலீசார் கோயம்புத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, டாக்டர் ரஜினிகாந்த் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவர் ரஜினி காந்த் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.