மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது அவசியம்
1 min read
Teachers need to vaccinate for the benefit of students
22.11.2021
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
‘அறம்’ அறக்கட்டளையின் தலைவரான உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கொரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைப் போட அனைத்துத் தரப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீட்டிப்பு உத்தரவைப் பின்பற்றி அரசுத் துறைகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நிலையங்களைத் திறந்து நேரடி வகுப்புகளை அரசு அனுமதித்துள்ளபோதும், கட்டாயத் தடுப்பூசி சுற்றறிக்கையால் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளனர். தடுப்பூசியால் எவ்விதப் பக்க விளைவும் இல்லை என ஒன்றிய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்தக் கட்டயப்படுத்தக் கூடாது என உத்தரவிடவேண்டு்ம.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கட்டாயம்
இந்த மனு புதிதாகப் பதவியேற்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் எனத் தெரிவித்தனர். சொந்தக் காரணங்களுக்காகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன் கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் அறிவுறுத்தினர்.
மேலும், தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தனர்.
தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும், மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.