தொழில் துறையில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றுவோம்; கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
We will make Tamil Nadu a leading state in the field of industry; MK Stalin’s speech in Coimbatore
22/11/2021
தொழில் துறையில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின்
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு பெற்ற திட்டங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வ.உ.சி. மைதானத்தில் இன்று (நவ.22) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரூ.646.61 கோடி மதிப்பில் 25,123 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.89.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 128 திட்டங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.557.91கோடி மதிப்பில் 70 புதிய திட்டப் பணிகளுக்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது;-
ஓட்டுப்போடாதவர்களுக்கும்…
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ வந்திருக்கேன் என்ற நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். மக்கள் பயன்பாட்டுக்காக இவ்விழா நடக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது. ஆனால் கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன். நான் ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டும் பணியாற்றுவதில்லை. ஓட்டு்பபோடாதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறேன்.
அப்படிதான் அண்ணா, கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார்கள். கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க செந்தில் பாலாஜியை நியமித்தேன்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு தீர்வு கண்டேன். ஸ்டாலினால் பெட்டியை திறக்க முடியாது, ஏமாற்றுகிறார் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் மனுக்களுக்கு நான் தீர்வு கண்டு வருவதை மக்கள் பெருமையாக பேசுகிறார்கள்.
நான் எப்போதும் அதிகமாக பேச மாட்டேன், செயலில் என்னுடைய பணி இருக்கும்; பேச்சை குறைத்து செயலில் உன்னுடைய திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப செயலாற்றுவோம்.
விமான நிலையம் விரிவாக்கம்
ரூ.1,132 கோடி தொகை கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுப் பணிகள் முடிக்கப்படும். கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படும். கோவையில் 5 திட்ட சாலைகள் ரூ.200 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செம்மொழி பூங்கா
கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கப்படும். சிறையை மையப்படுத்தி காந்திபுரம் இருந்த பகுதியில் உலகத் தரமிக்க செம்மொழிப் பூங்கா ரூ.200 கோடி மதிப்பில் 2 கட்டங்களாக அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் ரூ.11 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். ரூ.63 கோடி மதிப்பில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 மருத்துவ ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.
முதன்மை மாநிலம்
கோவையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். பேச்சை விட செயலில் எங்களது நடவடிக்கை இருக்கும். பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர்
அதன்பின் திருப்பூரில் ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் ரூ..56கோடியே 29 லட்சத்து 24ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, எஸ்.பி., சசாங் சாய், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு
முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் 1 டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் முழுவதும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டனர். முதல்-அமைச்சர் காரில் வரும் வழித்தடம் மற்றும் விழா நடக்கும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானம் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.