7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in 7 districts today
23.11.2021
நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, இன்று (நவ.23) மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (புதன் கிழமை) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமனா மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஓட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ், சோழவரம், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அதிகபட்சமாக தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடல் பகுதிகள் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்மேற்குவங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள். தமிழக கடலோர பகுதிகள் அதனை, ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை – வானிலை மைய இயக்குனர் தகவல்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை – வானிலை மைய இயக்குனர் தகவல்
Facebook Twitter Mail Text Size Printஇன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
பதிவு: நவம்பர் 23, 2021 13:19 PM
சென்னை,
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வரும் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
அதே சமயம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.