மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்
1 min read
Money that fell like rain in a rainwater pipe
24.11.2021
கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும். சாந்த கவுடா என்னும் அந்த பொறியாளரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து சில லட்சம் பணத்தை கைப்பற்றினர். பின்னர், மாடியில் இருந்து இணைக்கப்பட்டிருந்த மழைநீர் குழாயை சோதனையிட்டனர்.
குழாயை அறுத்து பார்த்ததில் அதிலிருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலிருந்து ஒருவர் குச்சியால் பணத்தை தள்ளிவிட கீழே மழை போல் விழுந்த பணத்தை ஒரு வாளியின் மூலம் சேகரித்தனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., மகேஷ் கூறுகையில், ‘சோதனையில் மொத்தம் ரூ.54 லட்சம் பறிமுதல் செய்தோம். அதில், குழாயில் இருந்து மட்டும் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டது,’ என்றார்.