இந்தியாவில் புதிதாக 9,765 பேருக்கு கொரோனா;477 பேர் சாவு
1 min read
9,765 new coronas in India; 477 deaths
2/12/2021
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. புதிதாக 9,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 477 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 551 நாளில் இல்லாதவகையில் 6,990 ஆக பதிவானது. ஆனால் நேற்று இந்த பாதிப்பு 28.1 சதவீதம் அதிகரித்து 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. ( இதில் கேரளாவில் மட்டும் 5,405 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக அதிகரித்துள்ளது.
477 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 477 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,69,724 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,37,054 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.35 சதவீதமாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 99,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,24,96,19,515 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,35,261 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,98,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64,35,10,926 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.