20 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற’ இந்திய பெண்
1 min read
Indian woman who won the ‘Miss Universe title’ after 20 years
13.12.2021
20 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை இந்திய பெண் வென்றார். அவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பிரபஞ்ச அழகி போட்டி
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 21 வயதான அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வழங்கப்பட்டது.
அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.
ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து கூறியதாவது:-
உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான். உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன், அதனால்தான் இங்கே நிற்கிறேன்.
இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அதற்கு காரணம் நமது பொறுப்பற்ற செயல்பாடுகள் தான். பேச்சை குறைத்து செயலில் தீவிரத்தை கூட்ட வேண்டிய நேரம் இது. காரணம் நமது ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கையை அழிக்கலாம் அல்லது காக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.