2001-பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
1 min read
President and Prime Minister pay tribute to the security forces killed in the 2001 parliamentary attack
13.12.2021
2001ஆம் ஆண்டு பாராளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பயங்கரவாதிகள் தாக்குதல்
டெல்லியில் பாராளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி காலை 11.30 மணியளவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்பை கொண்ட தீவிரவாதிகளின் 5 பேர் கொண்ட குழு திடீரென காருடன் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில் 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஆனாலும், எட்டு பாதுகாப்புப்படையினர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஜனநாயகம் என்று கருதப்படும் நாடாளுமன்ற மீது தாக்குதல் நடத்தியது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
அஞ்சலி
இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தன்னிடைய டுவிட்டரில் பதிவில், ” 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினர் அனைவருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தேசத்துக்கான சேவையும், உச்சபட்ச தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது” என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.