ஹெலிகாப்டர் விபத்தில் காயம் அடைந்த கேப்டன் வருண் சிங் மரணம்: மோடி இரங்கல்
1 min read
Captain Varun Singh dies after being injured in helicopter crash: Modi mourns
15.12.2021
ஹெலிகாப்டர் விபத்தில் காயம் அடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேப்டன் வருண் சிங்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் படுகாயம் அடைந்தார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் அவருக்கு பெங்களூரு கமாண்டோ ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் (14 பேரும்) உயிரிழந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோடி இரங்கல்
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கேப்டன் வருண் சிங் பெருமை, வீரம் மற்றும் மிகுந்த தொழில்முறையுடன் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி!’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும் மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார்’ என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஞகுரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவை அறிந்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன். இறுதி மூச்சு வரை போராடிய உண்மையான போராளி அவர். வருண் சிங் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயர நேரத்தில் நாங்கள் குடும்பத்துடன் உறுதியாக நிற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த வீரனின் ஆன்மா சாந்தியடையும், இந்த துயர சம்பவத்தை அவரது குடும்பத்தார்கள் தாங்கி கொள்ளும் வலிமையையும் இறைவன் அளிக்க வேண்டும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! என்று தெரிவித்துள்ளார்.