தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு; மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
Pay hike for Tamil Nadu Consumer Goods Corporation employees; MK Stalin’s speech
30/12/2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சையில் மு.க.ஸ்டாலின்
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
ஊதிய உயர்வு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதை பரிசீலித்து பட்டியல் எழுத்தருக்கு 5,285 ரூபாயாகவும், உதவியாளர்கள், காவலாளிகளுக்கு தலா 5,218 ரூபாயாகவும்.அகவிலைப்படி 3,499 ரூபாயை சேர்த்தும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு 3.25 ரூபாய் வழங்கப்பட்டு வந்த கூலி 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், 44,525 பேருக்கு ரூ. 238.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்ககினார். மேலும், 98.77 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 90 கட்டடங்களைத் திறந்து வைத்தார். தவிர, ரூ. 894.56 கோடி மதிப்பிலான 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.