தூத்துக்குடியில் காதலிக்க மறுத்ததால் சிறுமி வாயில் விஷத்தை ஊற்றி தானும் குடித்த வாலிபர்
1 min read
A young man who drank poison by pouring poison in the girl’s mouth because she refused to fall in love in Thoothukudi
3.1.2022
காதலிக்க வற்புறுத்தி சிறுமி வாயில் விஷத்தை ஊற்றி, தானும் குடித்த வாலிபர் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவி மீது காதல்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வபாண்டி மகன் வேல்முருகன் (வயது 20). இவர் 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வேல்முருகன், சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
விஷம் ஊற்றினார்
மேலும் வேல்முருகன் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து சிறுமியின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர் தானும் மீதம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, கத்தியால் இடது கையில் அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.
இதில் 2 பேரும் அடுத்தடுத்து மயங்கினார்கள். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதலிக்க வற்புறுத்தி சிறுமி வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் தானும் கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.