இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சீனா கட்டிய பாலம்; செயற்கைக்கோள் படம் மூலம் அம்பலமானது
1 min read
The bridge built by China on the border with India; Exposed by satellite image
4/1/2022
இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைகட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம்
இந்தியா – சீனா இடையே கடந்த 2020ஆம் ஆண்டு லடாக் பகுதி எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பான்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர்.
இந்நிலையில் இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கான கட்டமைப்பு வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது.
பாலம்
அதன் தொடர்ச்சியாக இந்தியாவை ஒட்டிய பாங்காங் ஏரியின் இரு கரைகளை இணைக்கும் வகையில் சீனா பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் படங்களில் தெரியவந்துள்ளது.
லடாக்கின் பான்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இதன் 40 சதவீதம் பரப்பளவு இந்தியாவிடமும் 50 சதவீதம் பரப்பளவு சீனாவிடமும் உள்ளது. சுமார் 10 சதவீதம் பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக நீடிக்கிறது. இந்தஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை ஆகும்.
செயற்கை கோள்
லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைகட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச புவியியல் உளவுத் துறை நிபுணர் டேமியன் சைமன் டுவிட்டரில் செயற்கைக்கோள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பான்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரையை இணைக்கும் வகையில் புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மலைப்பாங்கான எல்லையில் படைகளையும் ஆயுதங்களையும் விரைந்து கொண்டு செல்லும் வசதியை இந்தியா ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் சீனாவிடம் அந்த வசதி இல்லாமல் இருந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு நடந்த மோதலின் போது சீன படைகள் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. தற்போது அக்குறையை சரி செய்யும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
பான்காங் ஏரியின் வடக்கு பகுதியான குர்னாக்கில் இருந்து தெற்கு பகுதியான ரூடாக்குக்கு சாலை வழியாக செல்ல 200 கி.மீ. தொலைவை கடந்தாக வேண்டும். தற்போது இரு கரைகளையும் இணைத்து புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டியிருப்பதால் பயண தொலைவு 40 முதல் 50 கி.மீ. ஆக குறையும். சீன ராணுவ தரப்பில் மிக குறுகிய நேரத்தில் அதிக வீரர்களை பான்காங் ஏரிப் பகுதியில் குவிக்க முடியும்.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அப்போது முதலே பான்காங் ஏரியில் பாலத்தை கட்டத் தொடங்கிவிட்டது. தற்போது பாலம் பணிகிட்டத்தட்ட நிறைவடைந்துவிட் டது. இவை தவிர கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சாலை வசதிகளையும் சீனா மேம்படுத்தி வருகிறது.
மேற்கண்ட தகவலை பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.