June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

1 min read

Only 150 spectators are allowed on the Jallikkattu show

10.1.2022

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நிபந்தனைகள்

கொரோனா தொற்று காரணமாக எதிர்வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்:

  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றும் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். இதில், காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் பதவி செய்தல் வேண்டும்.

300 மாடுபிடி வீரர்கள்

  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டத்ற்கான சான்றும், கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

150 பார்வையாளர்கள்

  • கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு மிகாமல் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

நாட்டு காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க உள்ளோம். இ-சேவை மையங்கள் மூலம் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பதிவு செய்ய வேண்டும். தகுதியுள்ள காளை மற்றும் வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

ஒரு போட்டியில்…

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவர்கள் ஆன்லைனிலேயே அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம் , பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் எந்த போட்டியில் பங்கேற்ற வேண்டும் என வீரர்களும் , காளை வளர்ப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். வீரர்களோ அல்லது காளைகளோ ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கூடுதல் காலைகளுக்கு அனுமதி இல்லை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.