தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு- “தை பிறந்தால் வழி பிறக்கும்”
1 min read
PM Modi opens 11 new medical colleges in Tamil Nadu
12/1/2022
தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசும்போது, “தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
மருத்துவக்கல்லூரிகள்
விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ. 24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும்
இதி்ல் பிரதமர் மோடி பேசும்போது தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அவர் பேசியதாவது:-
தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும். அமெரிக்காவில் உலகத்தின் மிகப்பழமையான மொழியான தமிழில் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவ கல்லூரிகள் உள்ளன; 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
முதல் முறை
நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன. ஏற்கனவே 8 ஆயிரம் மக்கள் மருத்துவ மையங்கள் நாட்டில் உள்ளன.
ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதுவே முதல் முறை. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக்கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது.
மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2014-ம் ஆண்டில் 317 ஆக இருந்த மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 597 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா தொற்று உணர்த்தி உள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் மருந்துகளுக்கான செலவுதொகை குறைந்துள்ளது.
மருத்துவக்கல்லூரி திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவப்படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியில் இருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதில் கவர்னர், ஆர்.என்.ரவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி மன்சுக் அமாண்டவியா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.