இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Statue of Pennywick in the UK – Announcement by First Minister MK Stalin
15.1.2022
இங்கிலாந்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை நிறுவப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பென்னிகுவிக்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது பெரும் முயற்சியால் கட்டினார்.
பென்னிகுவிக் லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கவும், வறண்டு கிடந்த நிலங்கள் வளம் பெறவும் இந்த அணையை கட்டினார். இதனால், ‘முல்லைப்பெரியாறு அணையின் தந்தை’ என பென்னிகுவிக் அழைக்கப்படுகிறார்.
பிறந்தநாள்
தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து பென்னிகுவிக்கை கடவுள்போல் வணங்கி வருகின்றனர். பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று (ஜனவரி 15) தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ‘பென்னிகுவிக்’ பொங்கல் என்ற பெயரில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். மேலும் பென்னிகுவிக் பிறந்தநாளை அரசு விழாவாகவும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லி நகரில் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.