June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியா கேட் அமர் ஜவான் ஜோதி அணையா விளக்கு, தேசிய போர் நினைவுச்சின்ன அணையா விளக்குடன் இணைப்பு

1 min read

India Gate Amar Jawan Jyoti Anaya Lamp, Link to the National War Memorial Anaya Lamp

21.1.2022

டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்ன அணையா விளக்குடன் இணைக்கப்படுகிறது.

அணையா விளக்கு

1914-21 வரை முதல் உலகப்போரின் போது உயிர் நீத்த பிரிட்டிஷ், இந்திய வீரர்களின் நினைவாக 1921 ஆம் ஆண்டு டெல்லியில் ’இந்தியா கேட்’ நினைவுச்சின்னம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியா கேட் பகுதியில் 1971-ம் ஆண்டு அமர் ஜவான் ஜோதி என நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. 1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக அந்த அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.

போர் நினைவுச் சின்னம்

இதற்கிடையில், 1947-ம் ஆண்டு சுதந்திரந்திற்கு பின்னர் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இந்த போர் நினைவுச்சின்னத்தில் 1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னமும் இந்தியா கேட் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த விளக்கு இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்பட்டது. இரண்டு அணையா விளக்குகளும் ஒன்று சேர்க்கப்பட்டது.

தேசிய போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அங்கு அணையா விளக்கு எரிந்துவரும் நிலையில் இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி விளக்கு தனியாக எரிய தேவையில்லை எனவும் இரு விளக்குகளும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் அமர்ஜவான் ஜோதி அணையா விளக்கை ஒன்றிணைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது.
குடியரசு தின விழா நெருங்கி வரும் சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.