June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”-முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

1 min read

“Vacation Processor” Developed by the Police- Published by Chief Stalin

21.1.2022

சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”யை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்அமைச்சர்மு.க. ஸ்டாலின் இன்று (21.01.2022) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”யை (CLAPP) வெளியிட்டார்.
சுமார் 5800 காவல் ஆளிநர்களைக் கொண்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர் , ஆய்வாளர், உதவி ஆணையாளர்களை நேரடியாகச் சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாகப் பதிந்து செல்லவேண்டும். இது கடினமான பணியாக இருப்பதால் காவல் ஆளிநர்களின் நலன் கருதி இந்த CLAPP செயலி முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல் ஆளிநர்கள் தங்களிடம் உள்ள கைப்பேசியில் தமிழ்நாடு காவல் CLAPP என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரிகளுக்குச் சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக்கொண்ட காவல் ஆளிநர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.

மருத்துவ விடுப்பு

ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளைப் பொறுத்தவரை காவல் ஆணையாளர் அலுவலக விடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்பிற்குப் பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்து காவல் துணை ஆணையாளருக்கு (தலைமையிடம்) விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும். இந்தச் செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் மூன்று மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரக் காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்பத் தவறினால் படிப்படியாக காவல் ஆளிநர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளைச் சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலி, காவல் ஆளிநர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாகக் குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள CLAPP V2 செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.