இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 44,877 பேராக குறைந்தது; 684 பேர் சாவு
1 min read
Daily corona exposure in India dropped to 44,877; 684 deaths
13.2.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 44,877 பேராக குறைந்தது. மேலும் ஒரே நாளில் 684 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
கொரோனா தொற்று பாதிப்பு தினமும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆயிரத்து 77 ஆக பாதிப்பு இருந்தது. நேற்று இது மேலும் குறைந்து 50 ஆயிரத்துக்கு வந்துவிட்டது. சரியாக 50 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில் இன்று புதிதாக 44,877 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 11 சதவீதம் குறைவானதாகும். இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 877 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக அதிகரித்துள்ளது.
684 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,08,665 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,17,591 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,15,85,711 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.55 சதவீதமாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,37,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,72,81,49,447 பேருக்கு ( இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,16,801 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 14,15,279 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 75,07,35,858 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.