முதல்-அமைச்சர் உத்தரவையடுத்து பேரூராட்சி தலைவர்கள் ராஜினாமா
1 min read
City Panchayat Chairmen resigns on MK Stalin’s orders
12.3.2022
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து திருவேங்கடம் பேரூராட்சி தலைவர், சிவகிரி துணை தலைவர் ராஜினாமா செய்தார்கள்.
திருவேங்கடம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது திருவேங்கடம் பேரூராட்சி. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 வார்டுகளில் தி.மு.க., 4 வார்டுகளில் ம.தி.மு.க., 3 வார்டுகளில் சுயேட்சைகள், அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து தலைவர் பதவியை கைப்பற்றின. இதற்கிடையே இந்த பேரூராட்சி தலைவர் பதவியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக தி.மு.க. தலைமை அறிவித்தது.
சேர்மதுரை
அதன்படி ம.தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலமுருகன் என்பவர் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மறைமுக தேர்தலின்போது தி.மு.க.வை சேர்ந்த 9-வது வார்டு கவுன்சிலர் சேர்மதுரை போட்டி வேட்பாளராக நின்றார்.
இதனால் சேர்மதுரை 8 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவரானார். இதுகுறித்து ம.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. தலைமைக்கு புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ராஜினாமா
ஆனால் சேர்மதுரை பதவியை வாபஸ் பெறுவதில் தயக்கம் காட்டி வந்த நிலையில், தன்னை காண்பதற்கு வரும்போது போட்டி வேட்பாளர்கள் கண்டிப்பாக வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து தலைவர் பதவியை சேர்மதுரை ராஜினாமா செய்தார்.
சிவகிரி பேரூராட்சி
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 2 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த கோமதி சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவர் பதவியை தி.மு.க. தலைமை, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கியது. அதன்படி 9-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் துணைத்தலைவருக்கு போட்டியிட்டார். ஆனால் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விக்னேசும் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால் தேர்தல் நடைபெற்றது. இதில் 14 வாக்குகள் பெற்று விக்னேஷ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி நடந்த தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து முதல்- அமைச்ர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று சிவகிரி பேரூராட்சி துணைத்தலைவர் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரிடம் வழங்கினார். உடனடியாக அவர் அந்த கடிதத்தை பேரூராட்சி நிர்வாக அலுவலர் நவநீதகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.