பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் -பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min read
Importance of Palm Value Combined Products -Budget Announcement
19.3.2022
பனை மேம்பாட்டு இயக்கம் மற்றும் பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேளாண் பட்ஜெட்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
விடுதிகளில் தோட்டம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும். இத்தோட்டங்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைச் செடிகளை, மாணவிகள் கண்டறியவும், சாகுபடி முறைகள், அவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி அறிந்துகொள்ளவும் உதவும்.
இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், மூலிகைச் செடிகள், தென்னங்கன்றுகள், காய்கறி விதைகள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு விடுதி ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் 200 விடுதிகளுக்கு முழு மானியத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பனை பொருள்
பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனைமரம் விதையிட்ட நாளைத் தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் தானாய் வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார்
குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.
தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்கள் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு இலட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்கள்.
எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டிலும், இவ்வரசு 10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.