ஆலங்குளம் அருகே ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, புகையிலை பறிமுதல்
1 min read
Seizure of ration rice and tobacco stored in a hotel near Alangulam
19.3.2022
ஆலங்குளம் அருகே புகையிலை பொருட்கள் 80 பாக்கெட், ரேஷன் அரிசி 50 கிலோ மூடை 35 மற்றும் 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கீழக்கலங்கல் கிராமத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் கீழகலங்கல் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள பேட்டை தெரு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 32) என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மாரிமுத்து நடத்தி வந்த ஓட்டலுக்கு சென்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு புகையிலை பொருட்கள் 80 பாக்கெட், ரேஷன் அரிசி 50 கிலோ மூடை 35 மற்றும் 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.