புளியங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
1 min read
Auto driver commits suicide near Puliyangudi
22.3.2022
புளியங்குடி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சொக்கம்பட்டி கண்ணப்பர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் மனோஜ் குமார் (வயது 23). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
மனோஜ் குமார் கடந்த 19-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் சவாரி செல்வதாக கூறிவிட்டு தனது ஆட்டோவில் புளியங்குடிக்கு வந்தார். பஸ் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு, தான் கொண்டு வந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மனோஜ் குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனோஜ் குமாரும், சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோஜ் குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.