இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 பேர் தமிழகம் வருகை
1 min read
10 more visit to Tamil Nadu due to severe economic crisis in Sri Lanka
23.3.2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் அங்கிருந்து 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் ஆகிய 6 பேர் கடந்த திங்கட்கிழமை இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல்திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் மணல் திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 4-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருப்பதாக தமிழக மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்து இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் எல்லை பகுதியில் உள்ள 4-வது மணல் திட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்.
இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வந்தவர்களிடம், கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுடன் வந்த பெண் கியூரி ரூ.1 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கஜேந்திரன், அவருடைய மனைவி மேரி கிளாரா மற்றும் கியூரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் 10 பேர்
இந்த நிலையில் மேலும் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர்.
நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் என்ஜின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
போர் காலத்தில்…
இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.
தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக 12 ஆண்டுகளுக்கு பின்பு அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளோம். இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்ககை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளனர். எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கண்காணிப்பு தீவிரம்
தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். மேலும் சிலர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த கடல் பாதுகாப்பு அதிகரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.