நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஓலா நிறுவனம் தீவிர விசாரணை
1 min read
Electric scooter that caught fire in the middle of the road- Ola company serious investigation
27.3.2022
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தீவிரமாக விசாரணை செய்துவருவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
எலக்டரிக் ஸ்கூட்டர்
புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில், புதிய கருநீல வண்ண ஸ்கூட்டர் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிவது தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் டுவிட்டரில், “பாதுகாப்பு தான் முதன்மையானது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் சரி செய்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புனேயில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது. இந்த விபத்துக்கான மூல காரணத்தைப் புரிந்து கொள்ள நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.
முதல்முறை…
ரூ.499க்கு முன்பதிவு செய்து ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்று செல்லுங்கள் என்று அறிவித்து அந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன விற்பனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பல ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஓலாவின் எஸ்-1 மற்றும் எஸ்-1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் மற்றும் பேட்டரி வரம்பு குறித்தும் கவலை கொண்டுள்ளனர். ஓலா நிறுவன ஸ்கூட்டர்களில் இத்தகைய சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.