இலங்கையில் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது
1 min read
In Sri Lanka, the Mahinda Rajapaksa government lost its majority
5.4.2022
இலங்கையில் கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்கி கொண்டதால் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனை அடுத்து சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 2 நாட்கள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இலங்கை
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருவதால் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர்.
இதனை தொடர்ந்து நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரி சபை அமைக்கப்பட்டது.
ஏற்கனவே நிதி மந்திரியாக இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார்.
அலி சப்ரி மற்றும் மேலும் 3 புதிய மந்திரிகளுக்கு அதிபர் கோத்தபயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜினாமா
இந்த நிலையில், புதிய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அலி சப்ரி பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், இலங்கை அரசியலில் உச்சபட்ச குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிபர் கோத்தபயா அழைப்பு விடுத்து இருந்திருந்தார்.
இதற்கிடையில், போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மந்திரி சபை கலைக்கப்பட்டு புதிய மந்திரிகள் பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகளுடன் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
பெரும்பான்மையை இழந்தது
நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக்கொண்டன.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 145 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றன. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 43-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆளுங்கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டனர்.
ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசின் பலம் 102 உறுப்பினர்கள் ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் மகிந்தா ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
அதேவேளை, அரசு பெரும்பான்மையை இழந்தபோதிலும் அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கே அதிக அதிகாரம் உள்ளதால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேலும் சில நாட்கள் ஆகலாம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அப்போது நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்திலேயே மகிந்தா ராஜபக்சே அரசு கவிழும்.
2 நாட்கள் விவாதம்
இதற்கிடையே ஏற்கனவே அறிவித்தபடி இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் நாளையும் நாளை மறுநாளும் விவாதம் நடைபெறும் சபாநாயகர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.