பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு
1 min read
Shahbaz Sharif elected Pakistan’s new Prime Minister
11/4/2022
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பிரதமராக இருந்து இம்ரான்கானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ரவப்பட்டது. அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்காக நாடாளுமன்றம் கடந்த சனிக்கிழமை கூடியது. ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை ஓட்டெடுப்புக்கு விடுவதில் பெரும் இழுபறி நிலவியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் இணங்கி நடக்கவில்லை.
சபாநாயகர் விலகல்
ஒரே நாளில் சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
அன்று நள்ளிரவுவாக்கில், “இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அன்னிய சக்தியின் சதியில் ஒரு அங்கமாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கூறி சபாநாயகர் ஆசாத் கைசர் பதவி விலகினார். அவரது வழியில் துணை சபாநாயகர் காசிம் சூரியும் பதவி விலகினார்.
இப்படி அடுத்தடுத்து நடந்த திருப்பங்களைத் தொடர்ந்து, அடுத்த திருப்பமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக், சபைக்கு தலைமை வகித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினார்.
பதவி பறிப்பு
இதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தான் வரலாற்றில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான்கான் தட்டிச் செல்கிறார்.
புதிய பிரதமர்
இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) இன்று தேர்ந்து எடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர், நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகியுள்ளார்.
ஷபாஸ் ஷெரீப்பின் பூர்வீகம் காஷ்மீர்
பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார். ஷபாஸ் ஷெரீப்புக்கு தற்போது 70 வயதாகிறது.
லாகூரில் பஞ்சாபி மொழி பேசும் காஷ்மீர் குடும்பத்தில் 1951-ம் ஆண்டு ஷபாஸ் ஷெரீப் பிறந்தார். அவரது தந்தை முகமது ஷெரீப் தொழில் அதிபர் ஆவார். இவர் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியை சேர்ந்தவர். 20-ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் விஷயமாக இவர் புலம் பெயர்ந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ஜதிஉம்ரா கிராமத்தில் குடியேறினார் ஷபாஸ் ஷெரீப்பின் தாயார் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு 1964-ம் ஆண்டு இவர்களின் குடும்பம் அமிர்தசரசில் இருந்து பாகிஸ்தான் லாகூருக்கு இடம் பெயர்ந்தது. ஷபாஸ் ஷெரீப் தனது தந்தையுடன் வாகூர் சென்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தனது 49-வது வயதில் ஷபாஸ் ஷெரீப் அந்த சரவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு கடைசியாக சென்றார். லாகூருக்கு சென்ற பிறகு அவர்கள் ஷபாஸ் ஷெரீப் தனது சொந்தகிராம மக்களுடன் தொடர்பில் இருந்தார்.
ஷபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து 1980-ம் ஆண்டுகளின் மத்தியில் அரசியலில் நுழைந்தார். 1988-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப்மாகாண முதல்-மந்திரியாக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அந்த மகாணத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.
நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டுக்கு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு ராணுவ தளபதி பர்வீஷ் முஷரப் தலைமையிலான ராணுவ புரட்சியால் நவாஸ் ஷெரீப் அரசு கலைக்கப்பட்டாதால் ஷபாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் 8 ஆண்டுகள் வசித்தார். பின்னர் 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.
அதன் பிறகு 2008-ம் ஆண்டு 2-வது முறையாகவும், 2013-ம் ஆண்டு 3-வது முறையாகவும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.
‘பனாமா பேப்பர்’ வழக்கில் நவாஸ் ஷெரீப் நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பி.எம்.எல்.-என் கட்சித்தலைவராக ஷவாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2018-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார்.
2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக இம்ரான் கான் அரசால் தொடரப்பட்ட வழக்கில் ஷபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது வழக்கு தொடரப்பட்டதாக ஷபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் பல மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். அதன் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,
தற்போது இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பி.எ.எம்.எல்.-என் கட்சி நிறுவனர் நவாஸ் ஷெரீப்பால் முதல் முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நவாஸ் ஷெரீப்புக்கு தன் மகள் மரியம் நவாசை பிரதமராக்க வேண்டும் என்ற விருப்பம். இருந்தாலும் அவர் ஒரு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஷபாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கு தனது கட்சி சார்பில் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது கூட ஷபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்யாமல் கட்சியின் மூத்த தலைவர் சாதிக்கான் அப்பாசியை அடுத்த பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்தார்.
ஆனால் அதே நேரத்தில் முஷரப் ராணுவ புரட்சி செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்தபோது சகோதரரை கைவிட்டு விட்டு வெளியே வந்தால் பிரதமர் பதவி தருவதாக ஷபாஸ் ஷெரீப்பிடம் முஷரப் கூறினார். அதற்கு தான் மறுத்துவிட்டதாக ஒருமுறை ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
5 திருமணங்கள்
ஷபாஸ் ஷெரீப் 5 திருமணங்கள் செய்து கொண்டவர். தற்போது அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். விவாகரத்து செய்துவிட்டார். ஷபாஸ் ஷெரீப்புக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் ஹம்ஸா ஷபாஸ் பஞ்சா மாகாண எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இளைய மகன் சுலைமான் ஷபாஸ் குடும்ப தொழிலை கவனித்து வந்தார். பண மோசடி வழக்கில் அவர் தேடப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
ஷபாஸ் ஷெரீப் 3 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்கஉள்ளார்.