பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்: நடிகர் பாக்யராஜ் தாக்கு
1 min read
Critics of the PM were born prematurely: actor Bhagyaraj attacked
20.4.2022
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.
பிரதமரின் நலத்திட்டங்கள்
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022′ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:-
ஒய்வின்றி உழைப்பு
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான ஒன்று. தகுதியுள்ளவரை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேருக்கு இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள் என்பது சந்தேகம். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
கவர்னரின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதேபோல், சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை ஏற்க முடியாது. திரைத்துறையினரை திமுக. வினர் நசுக்கி கொண்டிருக்கின்றனர். நடிகர் பாக்யராஜ் பா.ஜ.க.வுக்கு ஆதரவு என்பதைவிட, பிரதருக்கு ஆதரவு என பார்க்க வேண்டும்.
இளையராஜா
இளையராஜா அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்தை எதிர்த்து அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் கிளம்பி வந்துவிட்டனர். இளையராஜாவின் கருத்தை எதிர்ப்பவர்கள், அம்பேத்கர் சொன்னதையும், மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வேண்டும்.
இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது கருப்பு கொடி காட்டியது யார்? காங்கிரசை திமுக.விடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.