சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் சாவு
1 min read
One killed in Sivakasi firecracker blast
20.4.2022
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிழந்து உள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி பர்மாகாலனியில் தங்க பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று வழக்கம்போல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பகல் 12 மணிக்கு எதிர்பாராத வகையில் அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஒரு அறையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. அதில் அமர்ந்து பணியாற்றி வந்த பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த சரவணன் மகன் அரவிந்தன் (வயது 22) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கட்டிட இடிபாடிற்குள் சிக்கி கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமான வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்த அரவிந்தன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் முதல் அமைச்சர் வெடிவிபத்தில் அரவிந்தன் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.