ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
1 min read
Extension of ban on demolition of occupied buildings in Jahangirpuri
21.4.2022
ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு இடிப்பு
தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் இந்துமத கடவுளான அனுமன் ஜெயந்தியையொட்டி கடந்த சனிக்கிழமை இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். போலீசார் அனுமதியளிக்காதபோதும் ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர்.
அப்போது, பேரணி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. மோதலில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதனை தொடந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும் என வடக்கு டெல்லி மாநகராட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
தடை
ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஜமியத் உலேமா ஐ ஹிந்த் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த விவகாரத்தை இன்று மீண்டும் விசாரிப்பதாகவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
2 வாரங்கள்
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆக்கிரப்புகளை அகற்றுவதை நிறுத்தும்படி நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு பின்னரும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆராயப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.