நளினிக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு
1 min read
Nalini’s parole extended for the 4th time – Tamil Nadu government order
27.4.2022
நளினிக்கு 4-வது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்த டிசம்பர் 27-ந்தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளித்தார்.
நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர், நளினிக்கு இதுவரை 3 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்று சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நளினி மே மாதம் 27-ந்தேதி வேலூர் சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.