உத்தரகாண்டில் புனித யாத்திரையில் இதுவரை 39 பேர் சாவு
1 min read
Thirty-nine people have been killed so far in a pilgrimage to Uttarakhand
16.5.2022
உத்தரகாண்டில் புனித யாத்திரை சென்ற பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புனித யாத்திரை
உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை பிரசித்தி பெற்றது. இதற்காக கடந்த 3ந்தேதி அக்சய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைதளங்கள் திறக்கப்பட்டன. அதில் யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தளர்வை முன்னிட்டு, 6ந்தேதி கேதர்நாத் மற்றும் 8ந்தேதி பத்ரிநாத்தும் பக்தர்களுக்கு திறந்து விடப்பட்டன.
39 பேர் சாவு
இந்நிலையில், புனித யாத்திரை தொடங்கி 13 நாட்களில் யாத்திரைக்கு சென்ற பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளனர் என உத்தரகாண்ட் பொது சுகாதார இயக்குனரான டாக்டர் சைலஜா பட் இன்று தெரிவித்து உள்ளார்.
அவர்கள் அனைவரும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலையேறுவதில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட பிற உடல்நலம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பயண வழிகளில் முக்கிய சந்திப்புகளில் பக்தர்களுக்கு சுகாதார பரிசோதனை நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில், உடல்நலம் பாதித்த பக்தர்களை ஓய்வு எடுக்க அறிவுறுத்துகின்றனர். உடல்நலம் தேறிய பின்பு பயணம் செய்யும்படியும் கூறி வருகின்றனர்.
பலர் பயணம் செய்யும் தங்களது வழிகளிலேயே உயிரிழக்கின்றனர். அதனால், மருத்துவ ரீதியாக உடல்நிலை சரியில்லாத நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் டாக்டர் சைலஜா கூறி உள்ளார்.