திருமண கோஷ்டியினர் சென்ற ஜீப் விபத்து; மணமகளின் தாய் உட்பட 9 பேர் சாவு
1 min read
Jeep accident at wedding party; Nine people were killed, including the bride’s mother
21/5/2022
கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
திருமணம்
கர்நாடக மாநிலம் தார்வார் அருகே நிகதி பகுதியை சேர்ந்தவர் நீலவ்வா(வயது 60). இவரது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நிகதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு ஜீப்பில் சென்றனர்.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது.
9 பேர் சாவு
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மணமகளின் தாய் நீலவ்வா, ஷில்பா மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்பட 7 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தார்வார் புறநகர் போலீசார் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.