பாகிஸ்தானிய பெண் ஏஜென்டுக்கு ராணுவ தகவல்; ராணுவ உயரதிகாரி கைது
1 min read
Military information to a Pakistani female agent; Army chief arrested
22.5.2022
பாகிஸ்தானிய பெண் ஏஜென்டிடம் ரகசியங்களை கசிய விட்ட இந்திய ராணுவ உயரதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதீப் குமார்
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இந்திய ராணுவத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் பணியமர்த்தப்பட்டவர் பிரதீப் குமார். இவரது மொபைல் போனுக்கு 6, 7 மாதங்களுக்கு முன் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், தனது பெயரை சதம் என்றும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரை சேர்ந்தவர் என்றும் அந்த பெண் அறிமுகம் செய்து கொண்டார். இதன்பின்னர் இருவரும் சாட்டிங் செய்தும், வாட்ஸ்அப் வழியே பேசியும், வீடியோ கால் செய்தும் வந்துள்ளனர்.
ராணுவத் தகவல்
இந்நிலையில், பிரதீப்பிடம் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி இந்திய ராணுவம் தொடர்புடைய ரகசிய தகவல்களை அந்த பெண் கேட்டுள்ளார். பிரதீப்பும், தனது அலுவலகத்தில் இருந்த ராணுவம் தொடர்புடைய ஆவணங்களின் புகைப்படங்களை திருடி, அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் பிரதீப்பை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து, கடந்த 18ந்தேதி மதியத்தில் இருந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில், மேற்கூறிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த பெண், பாகிஸ்தான் நாட்டு உளவு பிரிவில் பணியாற்றி வருபவர் என தெரிய வந்துள்ளது.
கைது
இதனை தொடர்ந்து, பிரதீப் கைது செய்யப்பட்டு உள்ளார் என ராஜஸ்தான் போலீசின் இயக்குனர் ஜெனரல் (நுண்ணறிவு) உமேஷ் மிஷ்ரா தெரிவித்து உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.