June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு: அண்ணாமலை பரபரப்பு ஊழல்குற்றச்சாட்டு

1 min read

Rs 77 crore loss to Tamil Nadu government: Annamalai scam allegations

6.5.2022
தமிழக அரசு மீது பாரதீய ஜனதா மாநிலததலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய உள்ளார். இதனால் தமிழக அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

ரூ.77 கோடி ஊழல்

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடப்போவதாக பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் எந்த அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் 2 தனியார் நிறுவனங்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதி அளித்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அண்ணாமலை கூறியதாவது:-

2 துறைகளில் முறைகேடு

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது. இந்த ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டது என்று நாங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லி வருகிறோம். முதல்-அமைச்சர் அதை சரி செய்வதாக கூறினாலும் இதுவரை அதை சீர் செய்யவில்லை. இன்று 2 துறைகளில் நடைபெற்று உள்ள மிகப்பெரிய முறைகேடுகளை பற்றி இப்போது தெரிவிக்கிறேன்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய ஒரு பை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஊட்டச்சத்து மாவு, சத்து மாத்திரை, ஒரு துண்டு பேரிட்சம்பழம் உள்பட 8 விதமான பொருட்கள் அதில் இடம் பெற்று இருக்கும். இந்த பொருட்களில் என்னென்ன பொருட்களை வைப்பது, என்னென்ன பொருட்களை நீக்குவது என்பது பற்றி அரசின் பொது சுகாதாரத்துறை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதியும், 15-ந் தேதியும் கூடி ஆலோசித்தது. அப்போது தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் ஊட்டச்சத்து மாவு விலை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக ஆவின் நிறுவன தயாரிப்பை வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 8-ந் தேதி இந்த முடிவை எடுத்து உள்ளார்கள்.
இந்த ஊட்டச்சத்து மாவு அடங்கிய பை ஆண்டுக்கு 23 லட்சத்து 80 ஆயிரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவன தயாரிப்பை தனியார் நிறுவன விலையை விட 60 சதவீதம் குறைவாக சப்ளை செய்ய முடியும் என்று ஆவின் நிறுவனமும் உறுதி அளித்து உள்ளது. ஆனால் கமிட்டி கூடி எடுத்த இந்த முடிவை அரசின் நிர்பந்தம் காரணமாக மீண்டும் மாற்றி ‘அனிதா டெக்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர்.

பொங்கல் தொகுப்பு

இந்த நிறுவனம் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் அதே நிறுவனத்திற்கு தான் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரும், அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் கார்த்திக் என்பவரும்தான். இவர்கள் தான் சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு நெருக்கடி கொடுத்து இந்த முடிவை மாற்றி இருக்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு ரூ.45 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்

மருந்து

. அதேபோல ‘அயர்ன் சிரப்’ வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளது. அரசின் மருந்து சப்ளை நிறுவனத்தில் இதன் விலை ரூ.42 மட்டும்தான். ஆனால் அனிதா டெக்ஸ் நிறுவனத்தினரிடம் ரூ.224 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.32 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த 2 பொருட்களில் மட்டுமே ரூ.77 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

இந்த விஷயத்திற்கு அரசு நிறுவனமான ஆவினில் இருந்து கொள்முதல் செய்வதற்கு எடுக்கப்பட்ட முடிவை ஏன் நிராகரித்தார்கள் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

மா.சுப்பிரமணியம் மீது புகார் இல்லை

அப்போது இடைமறித்த நிருபர்கள் இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதும் புகார் கூறுகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:-

அமைச்சர் சுப்பிரமணியன் மீது புகார் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வெளியில் இருக்கும் 2 நபர்கள் துறை ரீதியாக தலையிட அவர் எப்படி அனுமதித்தார் என்பதை விளக்க வேண்டும். தற்போது இந்த திட்டத்துக்கு ரூ.450 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.100 கோடி கைமாறி உள்ளது. இந்த டெண்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அரசு உடனே இதை ரத்து செய்ய வேண்டும்.

நில அங்கீகாரம்

அடுத்ததாக நில அங்கீகாரம் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருவதை விளக்குகிறேன். பொதுவாக நிலங்களை வாங்கி அதில் மனைபிரிவுகள் (லே-அவுட்) அமைத்து பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் உள்ளூர் வளர்ச்சி திட்ட துறை (டி.டி.சி.பி.) அனுமதி பெற வேண்டும். இதன் நடைமுறைகள் முடிவடைய அரசு நிர்ணயித்து இருக்கும் காலக்கெடு 200 நாட்கள். ஆனால் ஜி.ஸ்கொயர் என்ற நிறுவனம் கோவையில் 122 ஏக்கர் நிலத்தை வாங்கி 22.7.2021 அன்று அனுமதிக்காக விண்ணப்பித்து உள்ளார்கள். சரியாக 8 நாளில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.
இதேபோல் இந்த நிறுவனம் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, உப்பிலியாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் பெரிய அளவில் நிலங்களை வாங்கி அதிகபட்சம் 20 நாட்களில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.

விஞ்ஞான பூர்வ முறைகேடு

இதில்தான் விஞ்ஞானபூர்வமான முறைகேட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே பதிவு செய்யும் வகையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அந்த தளத்தை இயக்க செய்து முறைகேட்டை செய்துள்ளனர். இதற்கு உதவுவதற்காக பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சி.இ.ஓ. என்ற புது பதவியை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கு உதவுவதற்காக அதிகாரியை நியமித்து உள்ளார்கள். இந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமாகி அனைவராலும் பேசப்படுவதால் புதிதாக வெவ்வேறு பெயர்களில் 6 நிறுவனங்களை பதிவு செய்து உள்ளனர். அதன் இயக்குனர்களாக இருப்பவர்கள் முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு அமைச்சர் முத்துசாமி பதில் சொல்ல வேண்டும். ஒரு வருடமாக இந்த தலையீட்டுக்கு அவர் எப்படி அனுமதித்தார்.

வழக்கு

இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு துறையில் வழக்கு தொடர உள்ளோம். அந்த துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு தொடருவோம். இவ்வளவு ஆதாரங்களும் எங்களுக்கு எப்படி கிடைத்தது என்கிறீர்கள். நேர்மையாக வேலை செய்ய முடியாமல் நெருக்கடியில் தவிக்கும் அதிகாரிகள்தான் வெளியிடுமாறு கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.