நுபுர் சர்மாவை தொடர்ந்து இன்னொரு பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
1 min read
Case filed against another BJP MLA following Nupur Sharma
8.6.2022
மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக நுபுர் சர்மாவை தொடர்ந்து இன்னொரு பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ.
தெலுங்கானாவில் உள்ள கோஷாமஹால் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா சிங். அவர் மீது ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் முகமது அலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூபி துறவி ஹஸ்ரத் குவாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது அளிக்கப்பட்ட புகாரில் “பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்” என்று அலி தனது புகாரில் கூறியுள்ளார்.
எனினும், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்ததற்காக எம்.எல்.ஏ ராஜா சிங் மீது குற்றம் பதிவு செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரியில், உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் வெளிப்படையாக மிரட்டினார். இதனையடுத்து, உத்தரபிரதேச வாக்காளர்களை மிரட்டியதாக ராஜா சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், முகமது நபிக்கு எதிரான பாஜக செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மற்றொரு பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.