அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம் – அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
We publish corruption complaints against ministers every month – Annamalai allegation
13.6.2022
தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடக்கின்றன என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம் என்றார் அண்ணாமலை.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் புகார்கள்
தி.மு.க. அமைச்சர்கள் பா.ஜ.க. தொண்டர்களை பற்றி கூறும் பேச்சுகளை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படியிருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்?
லாக்கப் மரணங்கள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 7 லாக்கப் மரணங்களைத் தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது மிகவும் தவறானது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது.
தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. இதில் தி.மு.க.வின் அரசியல் தலையீடுதான் முதலில் சரிசெய்யப்பட வேண்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.