இமாச்சல பிரதேசத்தில் 40 மாணவர்களுடன் சென்ற பஸ் கவிழ்ந்து, 16 பேர் பலி
1 min read
A bus carrying 40 students overturned in Himachal Pradesh, killing 16
4.7.2022
இமாச்சல பிரதேசத்தில் 40 மாணவர்களுடன் சென்ற பஸ் கவிழ்ந்து, 16 பேர் பலியானார்கள்.
பஸ் கவிழ்ந்தது
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சைன்ஜ் ஜங்லா பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலை 8 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெருவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது, அந்த பேருந்தினுள் குறைந்தது 40 மாணவர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 16 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து குலு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோடி இரங்கல்
குலு பேருந்து விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேச கவர்னர், அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குலு பேருந்து விபத்துக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘தேசிய பேரிடர் மீட்பு படை’ உதவிக்கு அனுப்பப்படும் என உறுதியளித்தார்.
ரூ.2 லட்சம்
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் கருணைத் தொகையாக ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50, ஆயிரமும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.