இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக பொதுக்குழு தீர்மானம்
1 min read
Edappadi Palaniswami as Interim General Secretary – AIADMK General Committee Resolution
11.7.2022
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமியை தேர்வு செய்து பொதுககுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு
சென்னை அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் காலை 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் முழு விவரம் வருமாறு:-
விதி திருத்தம்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம். அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம்.
இடைக்கால பொதுச்செயலாளர்
அதிமுக சட்ட விதி 20அ பிரிவு 7ம் தேதி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் போட்டியிட முடியும் என்பது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
- இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
- தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளின் பணியாற்றி இருக்க வேண்டும்
- போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
- மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்
- இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்
- துணைச் பொதுச் செயலாளர்களை பொதுச்செயலாளர் நியமனம் செய்வார்.