சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்
1 min read
Chess theme at Chennai Napier Bridge
16.7.2022
சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையின் பிரதான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. வாகன ஓட்டிகளுக்கும், நேப்பியர் பாலம் வழியாக செல்லக்கூடிய வழிபோக்கர்கள் அனைவருக்கும் ஒரு புது வித அனுபவத்தை தரும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் இந்த ஓவியப் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த வழியாக செல்பவர்கள் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் நேப்பியர் பாலத்தை பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.