கழுகுமலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி- தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது
1 min read
Fraud of Rs 6 lakh from women claiming to get government jobs in Kalgukumalai- 3 persons including father and son arrested
19.7.2022
கழுகுமலையில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
மோசடி
கழுகுமலையில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரசு வேலைக்கு முயற்சி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெருவில் வசித்து வருபவர் ராஜ் மனைவி செல்வி (வயது 31). அதே தெருவை சேர்ந்த சுதாகர் மனைவி சாந்தி (37). இருவரும் இளங்கலை பட்டயபடிப்பு முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தனர். இந்தநிலையில் கழுகுமலையை சேர்ந்த ஆனந்தப்பன் மகன் சிவா (36) என்பவர், செல்வி மற்றும் சாந்தி ஆகியோர் வேலைக்காக முயற்சி செய்வதை அறிந்தார். இதைத்தொடர்ந்து அவர்களிடம் சென்று, தனது நண்பர் சென்னை ஜவகர்நகர் காலனி கென்னடி தெருவில் வசித்து வரும் காத்தபிள்ளை மகன் சுரேந்தர் (27) என்பவர் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதார துறையில் வேலைபார்த்து வருவதாக, கூறினார். பின்னர் சாந்தி மற்றும் செல்வியை சுரேந்தரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அப்போது சுரேந்தர், அரசு வேலை வாங்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார். இதன்பின்னர் முன்பணமாக ரூ.3 லட்சம் வீதம் சாந்தி மற்றும் செல்வி இருவரும் ரூ.6 லட்சத்திற்கான காசோலையை சுரேந்தரிடம் கொடுத்தனர். ஆனால், சுரேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சாந்தியும், செல்வியும் கடந்த 2019-ம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது சுரேந்தர், திருச்சி மணச்சநல்லூர் உளுந்தங்குடி நடுத்தெருவில் வசித்து வரும் தனது தந்தை காத்தபிள்ளை (60) மூலம் பணத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். மோசடி அதனைத்தொடர்ந்து சுரேந்தர், திருச்சி சமயபுரம் வங்கி பெயரில் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். அதேபோல் சென்னை கொளத்தூரில் ஒரு வங்கி கிளை பெயரில் ரூ.3 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். பின்னர் விசாரித்தபோது,
சென்னை கொளத்தூரில் அந்த வங்கி கிளை இல்லை என்பது தெரியவந்தது. அதேபோல் திருச்சி சமயபுரம் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலையும் திருப்பி வந்துள்ளது. அதனை அறிந்த செல்வி, சாந்தி ஆகியோர் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தாங்கள் மோசடி செய்யப்பட்டு விட்டதாக கழுகுமலை போலீசில் புகார் கொடுத்தனர். கைது அதன்பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சிவா மற்றும் சுரேந்தர், அவரது தந்தை காத்தபிள்ளை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.