ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கைது
1 min read
6 fishermen from Rameswaram arrested
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டனர். கச்சத்தீவு ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி (வயது38), மடகுபிச்சை (45), பாலமுருகன் (30), தங்கப்பாண்டி (55), அர்ஜுனன் (23), ராஜா (21) ஆகிய 6 மீனவர்களும் அந்த பகுதியில் மீன்பிடித்தனர். கைது அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்தோணி உள்ளிட்ட 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களது படகை பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு 6 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்து, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலோசனை கூட்டம் 6 மீனவர்கள் படகுடன் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) ராமேசுவரம் மீன்பிடி துறைமுக அலுவலகம் அருகே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.