இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா ?- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Is there a way to prevent the giving of freebies as promises?- Supreme Court question to Central Government
26.7.2022
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா ? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
இலவசங்கள்
மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என்பதை கண்டறியுமாறு சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசிடம் வாய்மொழியாக கேட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷிவினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்து இருந்தார். இது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, வாக்குகளை கவர “இலவசங்கள்” என்ற வாக்குறுதியைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையம்
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் “இந்த பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் தீர்க்க வேண்டும்” என தெரிவித்தார். இதற்கு “இலவசங்கள் தொடர வேண்டுமா வேண்டாமா என்று நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்” என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
பின்னர் கோர்ட்டில் மற்றொரு வழக்குக்காகக் காத்திருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்-யிடம் “இது குறித்து ஏதாவது பரிந்துரைக்க முடியுமா ? இந்த இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது?” என்று தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வு கேட்டனர். அப்போது கபில் சிபல் முன் வந்து, இலவசங்கள் ஒரு “தீவிரமான பிரச்சினை” என்றும், மாநில அளவில் அதைச் சமாளிக்க வேண்டும் என்றும் கூறினார்.